இன்று நாம் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இன்று திராவிட அரசியல்வாதிகள் எல்லோரும் திராவிடம் தான் ஆரியத்தை எதிர்த்தது என்று பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் திராவிடம் என்ற ஒரு சொல் உருவாவதற்கு முன்பே, ஆரியப்படைகளை விரட்டி, அடித்து ஓட விட்டு இருக்கிறார். நம்ம பட்டனான பாண்டிய நெடுஞ்செழியன். அதனால் தான் இவர் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்படுகிறார். இப்படி வீரத்தில் மட்டுமல்லாது, கல்வியிலும், அறத்திலும் சிறந்து விளங்கி ஒரு மன்னர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று, அனைவருக்கும் உதாரணமாக, வாழ்ந்தவர் தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
தமிழ் சங்கம் வைத்து தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்கள்;
சங்ககாலத்தில் நம் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதில் பாண்டிய மன்னர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். இவர்களுடைய பெயருக்குப் பின்னால் செழியன், வழுதி, மாறன், வர்மன் போன்ற பெயர்களைச் சேர்த்துக் கொள்வார்கள். மூன்று தமிழ் சங்கங்கள் வைத்துத் தமிழ் மொழியை வளர்த்தது இந்தப் பாண்டிய மன்னர்கள் தான். அந்த அளவிற்கு தமிழுக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பாண்டிய மன்னர்கள். அதே நேரத்தில் வீரத்திலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாண்டிய மன்னர்களில் ஒருவர் தான் இந்தப் பாண்டிய நெடுஞ்செழியன். இவருடைய ஆட்சி காலம் எந்தக் காலம் என்று நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இவர் சேரன் செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு தகவல் வரலாற்றில் இருக்கிறது.
பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் பாண்டியர்கள் நாணயத்தில் இருபுறம் பொறிக்கப்பட்டுள்ள உருவங்கள்;
இவர் கி.மு. 276 முதல் 245 வரை என்று சிலரும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் சிலர் கூறுகிறார்கள். பொதுவாகப் பாண்டியநாடு பல பிரிவுகளை உள்ளடக்கியது. மதுரை தான் பாண்டிய நாட்டின் முக்கிய தலைநகரமாக இருந்தாலும், கொற்கை, மோகூர், ஒல்லையூர், ஈலத்தின் தம்மப்பன்னி போன்ற ஊர்களையும் தலைநகராகக் கொண்டு தனித் தனியாக ஆட்சி செய்திருக்கிறார்கள் பாண்டிய மன்னர்கள். இவர்களுக்கெல்லாம் தலைமை மதுரை ஆண்ட பாண்டியர்கள் தான். இப்படி கொற்கை ஆண்ட பாண்டியர்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு நாணயத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் ஒரு புறம் செழிய என்றும், மறு புறம் யானையின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் வெள்ளி மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக வெள்ளியை மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்து, கடல் வணிகம் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டது என்று இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாணயங்கள் எல்லாம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
பாண்டியன் நெடுஞ்செழியன் காலம்;
மதுரையின் மன்னராக முடி சூடுவதற்கு முன்பு, நம்பி நெடுஞ்செழியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேல் பாண்டியன் போன்றவர்கள் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். அதன் பிறகு இவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகப் பாண்டிய மன்னர்களுக்குத் தலைமையேற்று மதுரையிலிருந்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். இதிலிருந்து ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் காலம் கி.மு. 270 ஆக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி காலத்தில் தமிழகம் தவிர, ஒட்டு மொத்த இந்தியாவின் மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்றியது மௌரிய பேரரசு.
நெடுஞ்செழியனை ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட காரணம்;
அவர்கள் தமிழகத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். இதைப் பார்த்துச் சினம் கொண்ட பாண்டிய நெடுஞ்செழியன் பாண்டிய மண்ணில் அவர்கள் கால் வைப்பதற்கு முன்பே, அவர்களை விரட்டி அடிப்பேன் என்று தன் படையுடன் கிளம்பிச் சென்றார். பொதுவாக இது போன்ற அந்நிய படைகளுடன் போருக்குப் போகும்போது சேர, சோழ, பாண்டியர்களின் படைகள் சேர்ந்து தான் போருக்குப் போகும். ஆனால் ஆரியப்படைகளை விரட்டி அடிக்க நான் ஒருவனே போதும் என்று தன்னுடைய படைகளுடன் கிளம்பிச் சென்று ஆரியர்களுடன் சண்டை போட்டார் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். எதிர்த்து வந்த ஆரியப்படை மிகப்பெரிய படையாக இருந்தாலும், பாண்டியனின் வீரத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள் தோல்வியைத் தழுவினார்கள். நெடுஞ்செழியன் போரில் வெற்றி பெற்று வாகை மாலை சூடினார். அவருடைய வீரத்தை புலவர்களும், மற்ற மன்னர்களும் வியந்து போற்றினார்கள். அதன் பிறகு தான் அவரை ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கவும் ஆரம்பித்தார்கள்.
இப்படி தமிழக மன்னர்கள் ஒற்றுமையாக வீரத்துடன் செயல்பட்டதால் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றிய மௌரியப் பேரரசால் கூடத் தமிழகத்தை கைப்பற்ற முடியவில்லை. மௌரிய பேரரசில் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அசோகர் கூடச் சேர, சோழ, பாண்டியர்களுடன் போர் தொடுக்காமல் அவர்களைத் தங்கள் நட்பு நாடுகள் என்று தான் தன்னுடைய கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதற்குக் காரணம் நம் முன்னோர்கள் அந்த அளவிற்கு வீரத்துடன் போர் புரிந்து இருக்கிறார்கள். இந்தப் பாண்டிய நெடுஞ்செழியன் பற்றி ஐம்பெரும் காப்பிகளான சிலப்பதிகாரத்தில் விரிவான தகவல்கள் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக;
வடவாரிய படைகடந்து, தென்தமிழ்நாடு கொங்குகாணப், புறைதீர் கற்பின் தேவி தன்னுடன், அரச கட்டிலிற்றுஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பாடி இருக்கிறார் இளங்கோவடிகள். இந்தப் பாடலில் அரசக் கட்டிலிற்றுஞ்சிய அதாவது, அரியணையிலேயே தன் மனைவியுடன் உயிர் நீத்தார் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பாடி இருக்கிறார் இளங்கோவடிகள். அவர் எதற்காகத் தன் மனைவியுடன் அரியணையிலேயே உயிர் துறந்தார் என்ற செய்தி நமக்குத் தெரிந்தால். நம் மன்னர்கள் எந்த அளவிற்கு அறத்துடன் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யமும். இப்போது நம்மை ஆட்சி செய்பவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்ற கோபமும் நமக்கு ஒரு சேர வரும். சிலப்பதிகாரமாக இதைப் பற்றிக் கூறுகிறது.
கண்ணகி மதுரையை எரித்த வரலாறு;
சோழ நாடு சோறு உடைத்த நாடு என்று சொல்வார்கள். அதைப் போல் பாண்டியநாடு முத்துடைத்தது. உலகத்திலேயே சிறந்த முத்துக்களைப் பாண்டிய நாட்டில் வாங்கலாம் என்று பல்வேறு வெளிநாட்டு பயணிகள் தங்களது குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது கடற்கரையில் குதிரையில் வரும்போது கடற்கரையில் கொட்டி கிடக்கும் முத்துக்கள் குதிரையின் கால்க் குழம்பின் இடுக்குகளில் மாட்டி, குதிரைகளுக்குத் தொந்தரவு கொடுக்குமாம். அப்படிப்பட்ட பாண்டிய நாட்டில் ஒருநாள் அளவில் மிகப்பெரிய முத்துக்கள் கிடைக்க, அதை மன்னருக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இந்த விலை உயர்ந்த முத்துக்களை வைத்துத் தன் மனைவிக்குக் கால் சிலம்பு செய்யச் சொல்லி அரண்மனைப் பொற்கொல்லனிடம் கொடுத்தார். அந்த முத்துக்களைப் பார்த்த பொற்கொல்லர் பேராசையால் சில முத்துக்களை எடுத்துப் பதுக்கி வைத்துக் கொண்டு, மீதமுள்ள முத்துக்களை வைத்து ஒரே ஒரு கால் சிலம்பு மட்டும் செய்து மன்னரிடம் கொடுத்தார். மற்றொரு சிலம்பை யாரோ திருடிவிட்டார்கள் என்று மன்னரிடம் பொய்யும் சொன்னார் அந்தப் பொற்கொல்லர். பாண்டியன் நெடுஞ்செழியன் இதை நம்பவில்லை.
ஆனால் பொற்கொல்லன் இன்னும் சில தினங்களில் கல்வனை நானே பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று மன்னரிடம் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றான். ஒரு பக்கம் இந்த உண்மை மன்னருக்குத் தெரிந்தால் தன் உயிர் போய்விடுமே என்ற ஒரு பயம், மற்றொரு பக்கம் முத்துக்கள் மீதான பேராசை. இதை இரண்டையும் யோசித்துக் கொண்டே கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தான் அந்தப் பொற்கொல்லன். அந்த நேரத்தில் தான் கோவலனும், கண்ணகியும் காவிரி பூம்பட்டினத்திலிருந்து வணிகம் செய்வதற்கு மதுரைக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது வணிகம் செய்வதற்கு பணம் திரட்டத் தன்னுடைய கால் சிலம்பை கழட்டி கோவலனை சந்தையில் விற்று வரச் சொன்னார்கள் கண்ணகி. அதனால் அந்தச் சிலம்பை விற்பதற்கு கடைவீதிக்குச் சென்றார் கோவலன். அப்பொழுது அந்த வழியாக வந்த அரண்மனை பொற்கொல்லன் கோவலன் கையில் இருந்த கால் சிலம்பு பார்த்து விடுகிறார். அந்தச் சிலம்பு பார்ப்பதற்கு பாண்டிய மன்னனின் மனைவி சிலம்பு போல இருந்தது. கோவலனின் கையிலிருந்து சிலம்பைப் பார்த்தவுடன் பொற்கொல்லனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. துரதிஷ்டவசமாகக் கோவலன் அந்தப் பொற்கொல்லனிடம் சென்று இந்தச் சிலம்பை விட்டுத் தருமாறு உதவி கேட்க, பொற்கொல்லன் கோவலனிடம் சிறிது நேரம் இங்கே காத்திரு என்று சொல்லிவிட்டு, அந்தக் கால் சிலம்புடன் பாண்டிய மன்னனிடம் சென்றான்.
பொற்கொல்லன் மன்னரிடம் சென்று சிலம்பை திருடிய கள்வனை கண்டுபிடித்து விட்டேன்.உடனே ஆட்களை அனுப்புங்கள் என்று சொல்ல, மன்னரோ தன்னுடைய காவலர்களை அனுப்பி, கள்வனை கொன்று, சிலம்பைக் கொண்டு வருக என்று சொல்லி அனுப்பினார். உடனே கிளம்பிய காவலர்கள் கடை வீதிக்குச் சென்று, கோவலனின் கையில் இருந்த சிலம்பை பார்த்தார்கள். அது அரசியின் சிலம்பு போலவே இருந்தது. ஆனால் கோவலனைப் பார்ப்பதற்கு திருடன் போலத் தெரியவில்லை. அதனால் அவனைக் கொல்லாமல் தயங்கி நின்றார்கள். எங்கே கோவலன் வாயைத் திறந்தால், நாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் பொற்கொல்லன் இல்லாதது, பொல்லாததை சொல்லப் படைவீரர்கள் கோவலனை கொன்று விடுகிறார்கள். இப்படி தன்னுடைய கால் சிலம்பை விற்கச் சென்ற தன் கணவனைத் திருடன் என்று பழி சொல்லிக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி கேட்ட கண்ணகி உடனே அழுகையுடனும், ஆத்திரத்தோடும் பாண்டிய மன்னனின் அரசவைக்கு சென்று, தேரா மன்னா செப்புவ துடையேல், யான் சிபிச் சக்கரவர்த்தியும், மனுநீதிச் சோழனும் ஆண்ட சோழ நாட்டின், உன்னால் கொல்லப்பட்ட கோவலனின் மனைவி கண்ணகி நான் என்று கூறினார்கள்.
ஒரு மன்னரைப் பார்த்துத் தேரா மன்னா என்று கேட்க எவ்வளவு தைரியம் வேண்டும், ஆனால் கண்ணகி அப்படிக் கேட்டார்கள். அதோட மட்டுமல்லாமல், தன்னுடைய கால் சிலம்பு மாணிக்கப் பரல்களால் ஆனது என்று அதை உடைத்தும் காட்டினார்கள். ஏன் அப்படி என்றால் பாண்டிய அரசியின் கால் சிலம்பு முத்துக்களால் செய்யப்பட்டது. இதைப் பார்த்த பாண்டிய நெடுஞ்செழியனுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானோ கள்வன்? மன்பதை காக்கும் தெண்புலம் காவல் என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என என்று கூறித் தான் செய்த தவறை எண்ணி, தன் அரியணையில் உயிரை விட்டார் பாண்டிய நெடுஞ்செழியன். இதைப் பார்த்த அவரது மனைவி கோப்பெருந்தேவியும் அங்கேயே அவர் உடல் மீதே உயிர் துறந்தார். அதன் பிறகும் கோபம் தீராத கண்ணகி மதுரை நகரையே எரித்தார். இப்படி தான் செய்த தவறுக்கு தன் உயிரை விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் கதையைக் கேட்டு, சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் அருகில் இருந்த சீத்தலைச் சாத்தனாரிடம் புலவரே, செழியனின் செங்கோல் அவன் ஆராயாது கோவலனை கொன்றதால், வளைந்து கொடுங்கோலாகியது.
ஆனால், உலகத்தார்க்கு அந்தச் செய்தி எட்டுவதற்குள் அவன் அரச கட்டிலிலே உயிர் நீத்ததும், அது மறுபடியும் நிமிர்ந்து செங்கோல் ஆகியது. அரசருக்கு நாட்டில் தகுந்த காலத்தில் மழை பெய்யாவிட்டால் அச்சம். உயிர்கள் தவறு செய்தாலும் அச்சம். மக்கள் துன்பமின்றி இன்பமாக வாழ்ந்தாலும் கூட, எவருக்கு எப்போது என்ன குறை நேரிடுமோ என்று அரசர் அஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி அரசருக்கு அடுத்தடுத்து அச்சமே உண்டு. எனவே அரசு குடும்பத்தில் பிறந்தவருக்கு என்னாலும் துன்பமே அன்றி வேறில்லை. இதனால் அரசு குடும்பத்தில் பிறப்பது தொழுதளவு உடையது என்று தனது ஆதங்கத்தையும், சோகத்தையும் பகிர்ந்து கொண்டார். இப்படிப்பட்ட அறத்தோடு ஆட்சி செய்திருக்கிறார்கள் நம் தமிழ் மன்னர்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில், இப்படியொரு பெண் நீதி கேட்டுப் போனால், கணவன் சென்ற அதே இடத்திற்கும் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள். இப்படி வீரத்திலும், கல்விலும் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர் அறத்திலும் சிறந்து விளங்கினார். புறநானூற்றின் 183 வது பாடலில் கல்வியைப் பற்றி அவர் எழுதிய பாடல்கள்மூலம், அவர்கள் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும், தன் நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று, எந்த அளவிற்கு ஆசை கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரியும். இது தான் அந்த பாடல், "உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" இதை விட கல்வியின் முக்கியத்துவத்தை யாராலும் சிறப்பாக சொல்லி விட முடியாது.
இதற்கு என்ன அர்த்தம் என்றால், தமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி செய்தும், அவருக்கு போதுமான அளவு பொருள் கொடுத்தும், பணிவோடு கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பல பிள்ளைகள் இருந்தாலுமே, அவர்களின் மூத்தவன் வருக என்று கூப்பிடாமல், அவர்களின் கல்வி கற்றவன் எவனோ, அறிவுடையவன் எவனோ அவனையே அரசன் தேடிச் செல்வான். சில நிதி நூல்கள் நான்கு குலங்களைக் கூறுகின்றன. இதில், கீழ் குலத்தில் ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், அவனிடத்தில் மேல் குலத்தில் உள்ளவன் கல்வி கற்க வருவான் என்று அர்த்தம்.
இந்தப் பாடலின் மூலம், கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சங்ககால தமிழ் மன்னர்கள் ஆரியர்களின் வாரணா சிரமத்தை சுத்தமாக மதிக்கவில்லை என்றும், தெரிய வருகிறது. ஏனென்றால் ஆரியர்களின் வாரணா சிரமத்தின் படி கீழ் சாதிக்காரர்கள் படிக்கவே கூடாது. ஆனால் பாண்டிய மன்னரோ, என்னடா மேல் சாதி, கீழ் சாதி, கீழ் சாதிக்காரன் என்று நீ சொல்கிறவர்கள் படித்து பெரிய ஆளானால், மேல் சாதிகாரன் கூட அவனிடம் படிக்க வருபவர்கள் என்று அப்பவே, ஆரியர்களின் சாஸ்திரங்கள் அனைத்தையும் உடைத்து எறிந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல, திருவள்ளுவர் முதல் ஒளவ்வையார் வரை அனைத்து சங்க அனைத்து புலவர்கள் எழுதிய சங்க இலக்கியங்களில் பிச்சை எடுத்தாவது படி என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஒரு புலவருக்கு இப்படி சொல்வதற்கும், மன்னருக்கு இப்படி சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஏனென்றால் மன்னருக்கு இப்படி ஒரு ஆசை இருந்தால் கட்டாயமாக மக்கள் படிப்பதற்கு நிறைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார். அதனால் தான் கீழடி, ஆதிச்சநல்லூர் தொடங்கி பாண்டிய நாட்டின் பகுதிகளில் எங்கு தோண்டினாலும் அங்கு கிடைக்கும் பானை ஓடுகளில் தொடங்கி, தங்க ஆபரணம் வரைக்கும், அனைத்திலும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வீரத்தோடும், அறத்தோடும், அறிவாற்றலோடும் ஆட்சி செய்த நம் பாட்டன் ஆரியப் படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியனைப் போற்றி கொண்டாடுவோம்.
Beatmark Download
Effect Download
0 Comments