அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்த போது விடுதலை வேட்கையுடன் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவத்திற்கு ஒரு பெரிய படையைத் திரட்டி அனுப்பிய பெருமைக்குச் சொந்தக்காரர் இந்தப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.
1908 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்னும் கிராமத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். அந்த ஊரின் ஜமீன்தாரரான உக்கிரபாண்டிக்கு இவர் ஒரே ஒரு வாரிசு. பள்ளிப் படிப்புக்குப் பின்னர், தன்னைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்ட இவர், அரசியலுக்குள் நுழைந்தது ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை தன் குடும்ப விவகாரம் காரணமாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான சீனிவாச ஐயங்காரைச் சந்திக்க சென்னை வந்திருந்தார் முத்துராமலிங்க தேவர் அவர்கள். அப்போது தான் காங்கிரஸ் மாநாடு குறித்த தகவல்கள் தேவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அதுவரை இறை வழிபாட்டில் மட்டுமே ஆர்வம் இருந்த இவருக்கு, அரசியலின் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. அந்தக் கூட்டத்தில் சுயராஜ்ஜிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தத் தீர்மானம் விவாதத்துக்கு வரவே இல்லை. இதற்கான காரணம் சுயராஜ்ய தீர்மானம் விவாதத்துக் கொண்டு வந்தால் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபடும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. அகிம்சையைக் கடைப் பிடித்த காந்தியின் வழி, வெள்ளையர்களை விரட்டி அடிக்க ஏதுவாக இருக்காது என்று நினைத்தார் முத்துராமலிங்கத் தேவர். அதனால் ஆயுதப் போராட்டத்தை விரும்பும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பக்கம் நிற்க முடிவெடுக்கிறார் முத்துராமலிங்க தேவர். அதற்கேற்றார் போல் சீனிவாச ஐயங்கார் மூலம் நேதாஜியின் அறிமுகம் தேவருக்குக் கிடைக்கிறது. அப்போதிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸை அரசியல் தலைவராகவும், சீனிவாசா ஐயங்காரை அரசியல் வழிகாட்டியாகவும் நினைத்துக் கொண்டார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அரசியல் ஈடுபடத் தொடங்கியதும் அவர் முன் பெரும் சவாலாக இருந்தது குற்றப் பரம்பரை சட்டம். அவர் சார்ந்த சமுதாயத்தைக் குற்றப் பரம்பரை என்று முத்திரை குத்திய ஆங்கிலேய அரசாங்கம், அவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் பரம்பரையே குற்றப் பின்னணி கொண்டது என்று கூறியது. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி காவல் நிலையத்துக்குச் சென்று மாலை நேரத்தில் கைரேகையை பதிவு செய்து விட்டு, மாலையிலிருந்து மறு நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும். மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும். தண்டனைக்குப் பயந்தே அப்போது மக்கள் மாலை முதல் மறு நாள் காலை வரை காவல் நிலையத்தில் இருக்கத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர்களிடம் நம் ஒட்டு மொத்த இந்தியாவும் அடிமைப்பட்டு கிடக்கிறது என்றால், போலீசாரர்களிடம் நம் ஒட்டு மொத்த மக்களும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்று, வேதனை அடைந்த முத்துராமலிங்கத் தேவர், இந்தக் கைரேகை என்னும் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார். கட்டை விரலை வெட்டிக்கொள் இல்லையேல் சிறைக்குச் செல், ஆனால் கைரேகை மட்டும் வைக்காதே என்று அவர் இட்ட முழக்கம், மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்த மக்களும் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். இதனால் காவல் நிலையத்தில் மாலை நேரத்தில் யாருமே கை ரேகை வைக்க வருவதே இல்லை.
இந்த விவகாரத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் தான் காரணம் என்று எண்ணிய போலீசார், சிவகாசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவல் நிலையத்திற்கு முன்பு கூடி விடவே, இந்தச் சட்டத்தை உடனே நீக்கி விடுவதை தவிர, வேறு வழி இல்லை என்று அப்போது ஆங்கில அரசு முடிவுக்கு வந்தது. ஆனால் நீக்கவில்லை. அதன் பிறகு, 1934 ஆம் ஆண்டு, மே 12, 13 ஆகிய தேதிகளில் ஆப்பநாட்டு மறவர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் நோக்கமே கைரேகை சட்டத்தை நீக்குவது தான். ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எடுத்துக் கொண்டு சென்னை வந்த முத்துராமலிங்க தேவர், கவர்னரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு, இச்சட்டம் படிப் படியாகக் குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டது. அப்போது மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராகவும், பிரச்சாரம் செய்து தமிழகம் முழுவதும் இந்தச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க முக்கிய காரணமாக இருந்தார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். குற்றப் பரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் மீது, முத்துராமலிங்க தேவருக்கு வெறுப்பு உண்டாகியது.
ஏனென்றால், போராட்டத்தின்போது தேவருடன் இருந்த பி.வரதராஜலு நாயுடு, பி.சசிவர்ம தேவர், பெருமாள் தேவர் மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு, அப்போதைய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்தப் பலனும் கிடைக்க வில்லை. அதன் பிறகு தான், போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றார் முத்துராமலிங்கத் தேவர். பின்னாளில் முதுகுளத்தூரில் வந்த தேர்தலில் தேவர் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று, வெற்றி பெற்றார். இதுவே, இவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர் தேவர் மாவட்ட வாரியத் தலைவராகவும் ஆனார். சட்ட மறுப்பு இயக்கத்தின் சார்பாக 1936 ஆம் ஆண்டு, நாடு முழுவதும் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது இப்போராட்டத்தை தமிழ்நாட்டின் சார்பாக முன் நின்று நடத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில், கள்ளுக்கடை மறியல் அதிக எழுச்சியுடன் நடைபெற்றது. விடுதலைக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இதனை எதிர்க்கும் விதமாகத் தென்னிந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்ல, வைத்தியநாத ஐயர் முடிவு செய்தார். ஆனால் அப்போது இந்த நடவடிக்கைக்குப் பலத்த எதிர்ப்பு நிலவியது. இந்தச் சூழலில் ஆலய பிரவேசக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. அப்போது ராஜாஜி, வைத்தியநாத ஐயர், என்.எம். ஆர். சுப்புராமன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். ஆலய நுழைவுப் போராட்டம் அமைதியாக நடைபெற, தேவரின் ஒத்துழைப்பும், உறுதி மொழியும் வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இதனை ஏற்றுக் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் என் சகோதரர்களான தலித் மக்கள் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்கள் பாதுகாப்புக்கு, நான் உத்திரவாதம் தருகிறேன் என்று போராட்டத்தை அவர் முன்னெடுக்க, ஒத்துழைப்பு கொடுத்தார். இதை அடுத்து, 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் நாள், காலை 10 மணிக்கு ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைமையிலான குழு தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிஞ்சய தேவாலய ஊழியர் முத்து என ஐந்து தலித் சமூகத்தினரும் சேர்ந்து வைத்தியநாத ஐயருடன் ஆலயத்தினுள் நுழைந்து, மதுரை மீனாட்சி அம்மன் வணங்கினர். அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன், வைத்தியநாத ஐயர், அரிஜனங்களை அழைத்து வரும்போது, அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலைச் சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பேன் என்று ஒரு துண்டுப் பிரசுரம்மூலம் முத்துராமலிங்க தேவர் அவர்களின் அறிக்கையை வெளியாகி இருந்தது. ஆலய நுழைவுப் பிரச்சாரம் அமைதியாக நடைபெறுவதற்கு, இந்த ஒரு துண்டுப் பிரசாரம் தான் முக்கியக் காரணம். 1939 ஆம் ஆண்டு காங்கிரசின் வருடாந்திர மாநாடு நடைபெற்ற நேரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும், பட்டாபி சீதாராம் அய்யாவுக்கும் கடுமையான போட்டி நிலவியது. மகாத்மா காந்தியின் ஆதரவு பெற்ற சீதாராம அய்யாவால் சுபாஷ் சந்திரபோஸ் வீழ்த்த முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் யார் என்று தெரியுமா? முத்துராமலிங்க தேவர் அவர்கள் தான். காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய வாக்குகள் அனைத்தையும் திரட்டிச் சுபாஷ் சந்திர போஸ்க்கு ஆதரவாகத் திரட்டி வெற்றியும் பெற வைத்திருந்தார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். காந்தியின் ஆதரவை பெற்ற வேட்பாளர் தோல்வியைத் தழுவியது மகாத்மா காந்திக்கு பிடிக்கவில்லை. இதனால் சுபாஷ் சந்திர போஸ் தனது பதவியை இராஜினாமா செய்யதோடு மட்டுமில்லாமல், கட்சியை விட்டும் விலகினார். முத்துராமலிங்கத் தேவருக்கும் குற்றப்பரம்பரைச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்பு இருந்தது. இதனால் அவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிச் சென்று, சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அகில இந்திய பார்வர்டு கட்சியின், தமிழகத் தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார்.
அப்போது ஒரு முறை சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வந்தபோது, வரலாறு காணாத ஒரு கூட்டத்தைத் திரட்டிப் பிரம்மாண்ட ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருந்தார் முத்துராமலிங்க தேவர். வளர்ந்து வந்த முத்துராமலிங்கத் தேவரின் செல்வாக்கினாலும், காங்கிரசுக்கு இருந்த போக்கினாலும், அவரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று நினைத்தது மெட்ராஸ் மாகாண அரசு. இதற்காக முத்துராமலிங்க தேவருடன் தொழிலாளர்கள் இணைந்த போராட்டத்தைக் காரணம் காட்டி, மதுரா பாதுகாப்பு என்ற பெயரில் முத்துராமலிங்கத் தேவர்மீது வழக்கு தொடுத்தது. ஒரு வகையில் இந்த வழக்கு தொடர யார் காரணம் என்று பார்த்தால், அது முத்துராமலிங்கத் தேவர் தான். ஏனென்றால், 1930 களில் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலட்சுமி ஆலயத் தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கிக் அவரே தலைமை ஏற்று நடத்தினார். மதுரா பின்னலாடை ஆலயத் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டத்தையும் அவரே தலைமை தாங்கினார். இதன் காரணமாகவே, மதுரா பாதுகாப்பு வழக்கு இவர்மீது பாய்ந்தது. இந்த வழக்கின் மூலம் முத்துராமலிங்க தேவரை மதுரையை விட்டு, வெளியேறாமல் தடுக்க நினைத்தது மெட்ராஸ் மாகாண அரசு. பின்னர், 1940 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர், மதுரையிலிருந்து தன் சொந்த ஊரான, பசும்பொன்னுக்கு பயணித்தபோது, திருப்புவனத்தில் அவரைக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது.
இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்குப் பின்னர், இவர் விடுதலை ஆனபோது, சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர், 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, நேரடி அரசியல் ஈடுபட்ட முத்துராமலிங்கத் தேவர், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொது தேர்தலான 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அல்லாத ஆட்சியினை நிலைப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சியைப் போட்டியிட வைத்தார். சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட முத்துராமலிங்கத் தேவர் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், போட்டியிட்டார். இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார். அதை எடுத்து வந்து 1957ஆம் ஆண்டு வந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் போட்டியிட்டார். இம்முறையும் அதேபோல இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் முத்துராமலிங்க தேவர். ஆனால் இந்த முறை சட்டமன்ற பதவியை துறந்துவிட்டு, நாடாளுமன்ற பதவியை ஏற்று டெல்லிக்கு புறப்பட்டார். 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய முத்துராமலிங்கத் தேவர், காமன்வெல்த் கூட்டமைப்பு குறித்து பேசியது மிக மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, காமன்வெல்த் நாடுகள் இந்தியாவை பொதுச் சொத்தாக கருதுகின்றனர். பங்கு போட்டுக் கொள்ள விருப்பப்படுகின்றனர்.
ஆனால், அவர்கள் நமது சுய ஆட்சியைப் பற்றி நினைப்பதே இல்லை. நமது நாட்டின் செல்வத்தை நேசிக்கும் அளவுக்கு, நமது சுயாட்சி மீது நாட்டம் கொள்ளாததால், இந்தக் கூட்டுறவு அபாயகரமாக முடியும் என்றார். இதோடு அவர் பேசிய இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. இந்திய தேசிய போராட்டத்தில் தீவிரவாதம், மிதவாதம் என்று இரு வெவ்வேறு அணிகளை கொண்டிருந்தோம். காந்தியடிகளின் அஹிம்சை வழியில் தான் சுதந்திரம் பெற்றதை நாமும் அறிவோம். அதை வேளையில் இக்கருத்தை, உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டதால் இந்தியா ஒரு அகிம்சாவதி நாடு என்ற பிம்பமும் தோன்றியது. இதில் உள்ள ஆபத்தை சுட்டிக் காட்டி பேசிய முத்துராமலிங்க தேவர் அவர்கள், அகிம்சையின் தத்துவம், சிந்திப்பதிலும், பேசுவதிலுமே இருக்கிறது. நடைமுறைப்படுத்துவதில்ல.அரசியல் ரீதியான செயல்களுக்கு, இந்த அகிம்சை முறை ஒத்து வராது என்பது நமக்குத் தெரியும். அகிம்சை, அகிம்சை என்று பேசிக் கொண்டு அதிக அளவில் இராணுவத்திற்குச் செலவிடுகிறோம். நாகா மலைவாழ் மக்கள் மீது இராணுவத்தை ஏவி விடுகிறோம். விவசாயிகளைச் சாய்க்க துப்பாக்கி பயங்கரவாதத்தை ஏவி விடுகிறோம்.
இது எந்த வகையான அஹிம்சா வாதம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்று பேசினார். இந்தியாவின் கொள்கைகளில் தொடங்கி விடுதலை அடைந்த நாடுகளின் அரசியல், இந்தியாவோடு சேர்க்கப்பட்டிருந்த காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில், மக்களின் நிலைப்பாடு எல்லாம் குறித்து பேசிய முத்துராமலிங்கத் தேவர், வலதுசாரி, இடதுசாரி அரசியல் குறித்தும் பேசினார். எல்லா நாடுகளிலும் வலதுசாரி, இடதுசாரி என்று இரண்டு பிரிவுகள் அரசியல் கட்சிகளாக செயல்படுகின்றன. இரண்டின் நோக்கமும் தேச நலனாக மட்டுமே இருக்கிறது. இரண்டையுமே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், அவர்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருப்பது போலத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். பொறுப்பின்மையும், சரியான கள நிலவரம் தவறியும், பேசி வைக்கும் இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்காக வலதுசாரிகள் தங்கள் மனதிற்கு தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் பிடியில் விட்டு விடாதீர்கள் என்று குறிப்பிட்டார். உலகம் முழுவதும் இன்று, வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் இந்த நாடாளுமன்றப் பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனலாம். மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு, முத்துராமலிங்கத் தேவர் பெரும் வரவேற்பு அளித்ததைப் போல, கொல்கத்தா சென்ற போது முத்துராமலிங்க தேவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இரண்டு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றி இருந்தார் முத்துராமலிங்க தேவர். 1940 ஆம் ஆண்டு நேதாஜி சபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த போது, அவர் உயிரோடுதான் இருக்கிறார். நான் அவரைச் சந்தித்து பேசினேன் என்று கூறினார் முத்துராமலிங்க தேவர். அதன் பிறகு, தியாகி இமானுவேல் சேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர் மீதான வழக்கு புதுக்கோட்டை நீதி மன்றத்தில் நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் முத்துராமலிங்கத் தேவர் குற்றமற்றவர் என்று கூறி, நீதிமன்றம் விடுதலை செய்தது. வழக்கில் இருந்து விடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில், மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசுக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து, பார்வர்டு கட்சி போட்டியிட்டது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடித்தது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு உடல் நல குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்த முத்துராமலிங்கத் தேவர், 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கினார். அப்போது மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ராஜாஜியோடு இணைந்து ஒரே மேடையில் பேசினார். இந்த கூட்டம் தான் முத்துராமலிங்க தேவர் பங்கேற்ற கடைசி அரசியல் கூட்டம்.
அதன் பிறகு தீவிர உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முத்துராமலிங்கத் தேவர், 1963ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் காலமானார். தீவிர ஆன்மீகவாதியான முத்துராமலிங்கத் தேவரின் உடல் வள்ளலாரின் முறைப்படி, அமர்ந்த நிலையில் பூஜை நடத்தி அடக்கம் செய்யப்பட்டது. காங்கிரசிலிருந்து பிளவு பட்ட காரணத்தால் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக, காங்கிரசார்கள் செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவியது. இதனாலையே பார்வர்டு பிளாக் கட்சியினர் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தனர். தன் மீது பூசப்பட்ட சாதி அடையாளத்தைத் துறக்கவும், தன்னை தேசியத் தலைவராக அடையாளப்படுத்திக் கொள்ளவும், தன் வாழ்க்கை முழுவதும் அரும்பாடுபட்டார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். முத்துராமலிங்கத் தேவரை சாதித் தலைவராக பார்க்காமல், தேசியத் தலைவராக பார்க்க வேண்டும் என்பதே அவரது வாழ்க்கைப் வாழ்க்கை பாடம் நமக்கு உணர்த்துகிறது. தன் வாழ்க்கையைத் தன் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் அவர்கள். இவரைப் போன்ற ஒரு நல்ல மனிதர் இனிமேல் எப்போதும் நம் பூமியில் பிறக்க வாய்ப்பே இல்லை. முத்துராமலிங்கத் தேவரைப் போல் ஒரு தெய்வப் பிறவி இதற்கு முன் பிறந்ததும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதுமில்லை.
Beatmark Download
effect Download
0 Comments