முதலாம் ஆதித்த சோழன் | முதலாம் ஆதித்த சோழன் வரலாறு

இன்று நாம் சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்த சோழனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

பண்டைய காலக் கட்டத்தில் மன்னர்கள் அனைவரும் தங்களது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களது பகுதிகளை ஆட்சி செய்து கொள்ளவும், அடுத்த நாட்டு மன்னர்களிடம் எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ளவும், போர் முறைகளைக் கையாண்டனர். இந்த நிலையில் வரலாற்றில் எந்த ஒரு சோழ மன்னர்களும், முதலில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அதன் பிறகு, அந்தப் பேச்சுவார்த்தை சரியாக வரவில்லை என்றால், அதன் பிறகு போருக்குச் சென்று விடுவார்கள். ஆனால் இந்த மன்னர் மட்டும் முதலில் போர் செய்துவிட்டு, அதன் பிறகு பேச்சு வார்த்தைக்கு அழைப்பார். ஆம், அவர் தான் விஜயாலயச் சோழனின் வீர மைந்தனான முதலாம் ஆதித்த சோழன். 


இந்தப் பதிவு சென்ற பதிவின் தொடர்ச்சி. பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் ஒரு முனையில் நிற்க, மறு முனையில் ஒரு வீரனின் வாளில் ரத்தமானது வடிந்து கொண்டிருந்தது. ஆம், அவ்வீரனே ஆதித்த சோழன் ஆவார். அப்போர்க் களத்தில் சோழ வீரர்கள் இரு புறமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். பின்னர் இதனைப் பார்த்த, பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் ஏன், சோழப் படைகள் இப்படி இரண்டு புறமும் சிதறி ஓடுகிறார்கள் என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தார்கள். இப்படி சோழப் படைகள் இரண்டு புறமும் சிதறி ஓடிக் கொண்டிருக்கும்பொழுது, அதன் நடுப் பகுதியில் தனி ஒரு வீரனாக நின்று கொண்டு இருந்தார் ஆதித்த சோழன். அவருடன் சில வீரர்களும் நின்று கொண்டிருந்தனர். இரு புறமும் சிதறி ஓடிய, சோழ படைகள்மீது தாக்குதல் நடத்துமாறு பாண்டிய மன்னன் கட்டளை இடுகிறான். ஆனால் பாண்டியப் படைகளால் அவர்களைத் தாக்க முடியவில்லை. ஏனெனில் சோழப் படைகள் தப்பித்து, தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இதனை அறிந்த பாண்டிய மன்னன், ஓடுபவர்களை விட்டு விடுங்கள். 


போர்க் களத்திற்கு நடுவே தனியாக நிற்கும் ஆதித்த சோழனை நோக்கிப் படையெடுத்துத் தாக்குதல் நடத்துங்கள் என்று உத்தரவிட்டான். இதனை அடுத்து போர்க் களத்தில் ஆதித்தச் சோழனை நோக்கிப் பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் நகர்ந்தது. அப்பெரும் படையைக் கொன்று குவித்தார்கள் ஆதித்த சோழனும், அவரது படை வீரர்களும். இதனைக் கண்ட பாண்டிய மன்னனுக்கும், பல்லவ மன்னனுக்கும் மிகப் பெரிய வியப்பாகவே இருந்தது. இப்படிப் பட்ட பெரும் படையை ஆதித்தச் சோழன் எப்படி கொன்று குவிக்கிறார் என்று.  அம்மன்னன் சற்று பின்னால் திரும்பிப் பார்த்தப் பிறகு, அதற்குப் பின் பேரிடியாக வந்து விழுந்தது. ஆம், போர்க் களத்தில் சிதறி ஓடிய சோழப் படைகள் பாண்டியப் படைகளையும், பல்லவப் படைகளையும் சுற்றி வளைத்து இருந்தது. அதன் பின்னரே இதன் வியூகத்தை பாண்டிய மன்னன் அறிந்தான். இவர்கள் சிதறி ஓடவில்லை கூம்பு போன்ற அமைப்பில் ஓடிக் கொண்டிருந்தார்கள் என்று. இப்படி வியூகம் அமைக்கக் காரணம், ஒரு முனையில் நின்று கொண்டிருந்த ஆதித்தச் சோழனை நோக்கி, எதிரிகளின் பெரும் படை நகர்ந்தது.


இதனை ஆதித்த சோழன் எளிதில் வீழ்த்துவதர்க்கும் சாதகமாக அமைந்தது. பாண்டியப் படை வீரர்களையும், பல்லவப் படை வீரர்களையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து, பின்னர் அவர்களைச் சோழப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். இது தான் கூம்பு வடிவ வியூகமாக மாறி நிற்கிறது. இதற்காகத் தான் ஆரம்பத்தில் சோழப் படைகள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அதை இப்போதே பாண்டியப் படை வீரர்களும், பல்லவப் படை வீரர்களும் உணர்ந்து இருந்தனர். போர்க்களத்தில் ஒரு முனையில் தனி ஒரு வீரனாக ஆதித்த சோழனும்,  மறு முனையில் சோழப் படை வீரர்களும் கம்பீரமாகக் கர்ஜித்து நின்றனர். இவர்களுக்கிடையில் பாண்டியப் படை வீரர்களும், பல்லவப் படை வீரர்களும் சற்று கலங்கியே நின்றனர். இந்நிலையில் தான் போர்க் களத்தில் ஒருவரின் குரல் மட்டும் சிங்கத்தின் கர்ஜனைப் போல ஒலித்தது.


இப்போது நீங்கள் பின்னோக்கி சென்றால் உங்களின் தலை தப்பும். இல்லை என்றால் பாண்டியப் பேரரசும், பல்லவப் பேரரசும் இருக்காது என்று கர்ஜித்தார் ஆதித்த சோழன். இதன் பின்னர் போரை நிறுத்திவிட்டு, பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் பின் வாங்கிச் சென்றனர். இப்போர் நடக்கும்போது ஆதித்த சோழன் இளவரசராகத் தான் இருந்தார். இளவரசராகவே இருந்தபொழுது இரண்டு மாபெரும் பேரரசர்களை  வென்ற வீரன் தான் இந்த ஆதித்த சோழன். பின்னாளில் முதுமை அடைந்து விஜயாலயச் சோழன் மரணம் அடைகிறார். இதனை அடுத்து விஜயாலயச் சோழனின் மகன் ஆதித்ய சோழன் சோழ தேசத்தின் அரசனாக உருவெடுக்கிறார். சோழ தேசத்தைச் சுற்றியுள்ள பல்லவ தேசத்தில் மூன்றாம் நந்திவர்மனின் மகன்களான நிருபதுங்க வர்மன், அபராஜித வர்மன் இவர்கள் இருவருக்கும் இடையில் அடுத்த மன்னன் யார்? என்ற யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏற்கனவேப், பாண்டியர்களும், பல்லவர்களும் ஒற்றுமையாக  இருந்தமையால் நிருபதுங்க வர்மனுக்கு பாண்டிய மன்னனான, வரகுண வர்மன் ஆதரவு அளித்தான்.


அதன் பின்னர் நிருபதுங்க வர்மன் பல்லவ தேசத்தின் அரசன் ஆகிறார். மற்றொரு புறம் அபராஜித  வர்மன் தனக்கான ஆதரவுகளைத் திரட்டக் கங்க தேசத்தையும், சோழ தேசத்தையும் நாடினார். பின்னாளில் இவர்கள் இருவரின் ஆதரவும் அபராஜித வர்மனுக்குக் கிடைத்தது. இதன் பிறகு நிருபதுங்க வர்மனுக்கும், அபராஜித வர்மனுக்கும் ஏற்கனவே இருந்த சண்டையானது எல்லையை மீறி சென்றது. இந்தச் சண்டையைத் தீர்க்கும், விதமாகப் பாண்டிய மன்னனான, இரண்டாம் வரகுண வர்மன் இருவரையும்  போருக்கு அழைத்தான். அப்போர்க் களத்தில் ஒரு புறம் பாண்டிய மன்னனான வரகுண வர்மனும், நிருபதுங்க வர்மனும் இருவரும் இருக்க, மற்றொரு புறம் அபராஜித வர்மனுக்கு ஆதரவாகக் கங்க தேச மன்னர்களும் அவரது படைகளும் வந்து சேர்ந்தன. இருவருக்கும் இடையே நடந்த போரில் பாண்டிய மன்னனும், நிருபதுங்க வர்மனும் வெற்றி அடைந்தனர். பின்னர் இவ்வெற்றியை கொண்டாடும் விதமாக, வெற்றிச் சங்கை முழங்கும் நேரத்தில், போர்க் களத்தின் நடுவே இடி, மின்னலின் ஓசை இவன் வருகையைப் பறைசாற்ற,  இரண்டும் ஒரு கணம் ஒரு ஒளி ஒலித்தன. ஆம், போர்க் களத்தின் நடுவே ஒரு குதிரையின் மீது, வீரன் ஒருவன் வந்து கொண்டு இருந்தான். அவரின் பெயரை நான் உச்சரிக்க வேண்டுமா என்ன? அதோ, மறு முனையில் நின்று கொண்டிருந்த பாண்டிய மன்னனின் உதட்டில் அது, அது ஆதித்த சோழன் என்று சற்று நடுங்கித் தயக்கத்துடன் கூறினார். 


ஆதித்த சோழனுக்கு பின்னால் அவரது பெரும் படையும் வந்து கொண்டிருந்தது. வரலாற்றில் எந்த ஒரு சோழ மன்னராக இருந்தாலும், முதலில் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு, அது சரி வரவில்லை என்றால் மட்டுமே போர்க்கு செல்வார்கள். ஆனால், இம்மன்னர் மட்டுமே முதலில் போருக்கு அழைப்பார். அதன் பின்னர் தான், பேச்சு வார்த்தைக்கே அழைப்பார். இதுவே ஆதித்த சோழன். அவன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் வீரத்திற்கும் சான்று என நாம் அறியலாம். இப்போரில் பாண்டிய தேசமும், பல்லவ தேசமும் வீழ்த்தப்படுகிறது. இந்தப் போரில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆதித்த சோழன் ஆவார். பின்னாளில் பல்லவ தேசம் அபராஜித வர்மனிடம் சென்றது. அவன் மன்னனாகப் போர்க் களத்தில் உதவிய ஆதித்த சோழனுக்கு, நன்றி செலுத்தும் விதமாக அபராஜித வர்மன், பெரும் நிலப் பரப்பையும், பாண்டிய தேசத்தில் கைப்பற்றிய நிலப் பரப்பையும் ஆதித்த சோழனுக்குப் பரிசாக அளித்தான்.


இதன் பிறகு சோழர்களும், பல்லவர்களும் அடிக்கடி பாண்டியர்களின் மீது போர் நடத்தவே, பின்னாளில் பாண்டியர்களின் பேரரசு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மாபெரும் பேரரசான பாண்டிய தேசம், சோழர்களுக்குக் கீழ் மன்னிக்கவும், அப்பெரும் வீரனான ஆதித்த சோழனுக்கு கீழ் வந்தது. பின்னாளில் தென்னிந்தியாவில் ஆதித்த சோழன் மிகப் பெரிய மன்னராக உருவெடுக்கிறார். தன் நாட்டு மக்களைச் சிறப்பாகவும் ஆட்சி செய்து வருகிறார்.  தமிழகத்தின் பெரும் பகுதிகளையும் கைப்பற்றினார் ஆதித்த சோழன். இவன் சிவனின் மீது உள்ள பெரும் பற்றினால், காவிரி ஆற்றின் இரு கரை ஓரங்களிலும் 108 சிவாலயங்களை எழுப்பினார். இதனை அன்பில் செப்பேடுகள் நமக்கு வீரத்துடன் எடுத்துரைக்கின்றன.


இப்படி சிறப்பாக ஆட்சி செய்த ஆதித்த சோழனின் 32 வது ஆண்டு ஆட்சியில், கிபி 93 ஆம் ஆண்டு பல்லவ தேசத்திலிருந்து ஒரு ஓலை சோழ தேசத்திற்கு வருகிறது. அவ்ஓலையில் பல்லவர்கள் சோழர்களுக்குப் பரிசாக அளித்த நிலங்களுக்கு வரி செலுத்தத் தேவை இல்லை. ஆனால் இருவரும் சேர்ந்து போரிட்டு வென்ற பாண்டிய தேசத்திற்கு சோழர்கள், பல்லவர்களுக்கு வரி கட்ட வேண்டுமென்று அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது. அந்த ஓலையை அனுப்பியவன் பல்லவ மன்னனான அபராஜித வர்மன். நான் முன்பே கூறியிருந்தது போல், பேச்சு வார்த்தை நடத்தி விட்டுப் போருக்குச் செல்பவன் ஆதித்த சோழன் அல்ல. முதலில் போர்க் களத்திற்கு நெஞ்சில் உறத்துடனும், வீரத்துடன், வாளுடன் போருக்குச் செல்பவனே இந்த மாபெரும் வீரனான ஆதித்த சோழன். பின்னர் ஆதித்த சோழன் பல்லவ மன்னனான அபராஜித வர்மனை போர்க் களத்தில் சந்தித்தான். பின்னர் அப்போர்க் களத்தில் ஆதித்த சோழன், பல்லவ மன்னனான அபராஜித வர்மனை யானைமீது ஏறி நின்று கொன்றார். ஆதித்ய சோழன் இத்தகைய வீர தீரச் செயலைச் செய்ததற்கு பிறகு மிகப் பெரிய பேரரசாக இருந்த பல்லவ பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னாளில் மிகப் பெரிய பேரரசாக இருந்த பாண்டியர்களையும், பல்லவர்களையும் இவரது ஆட்சி காலத்தில் வீழ்த்தி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களையும் ஒரு சேர, ஒரே மன்னனாக ஆட்சி செய்து வந்தான். இதனாலேயே அப்போதைய தமிழகம், இவனை ராஜ கேசரி வர்மன் என்று அழைத்தது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய சோழ மன்னனின் பார்வை அடுத்து சேர தேசத்தின் மீது விழுந்தது. ஆம், அந்தத் தேசத்தின் மீது படையெடுக்க நினைத்தான் ஆதித்த சோழன்.


ஆனால், பின்னாளில் ஆதித்த சோழனுக்கும், சேர தேச மன்னனுக்கும் மிகப் பெரிய நட்புறவு ஏற்பட்டது. இவருடைய நட்புறவில் ஒரு படி மேலே சென்று ஆதித்த சோழனின் மகனுக்கும், சேர மன்னனான ஸ்தானுரவின் மகளுக்கும் திருமணமே நடைபெற்றது. சோழ தேசத்தை மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுக்கத், தன் தந்தை தொடங்கி வைத்த, அத்தியாயத்தை அடுத்த கட்ட எல்லைக்கு எடுத்துச் சென்றவரே இந்த ஆதித்த சோழன். பின்னாளில் முதுமையினால் சித்தூர் மாவட்டம் காலகஸ்தி அருகில் உள்ள தொண்டை மாநாடு என்னும் இடத்தில் உயிரிழக்கிறார். இதனை அடுத்துத் தன் தந்தையின் வீரத்திற்குச் சான்றாகவும், சிவனின் மீது உள்ள பற்றின் காரணமாகவும், தன் தந்தையை எரித்த சாம்பலை வைத்து ஒரு சிவனின் கோயிலைக் கட்டினார். ஆம், அவரே முதலாம் ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன். இவரின் வாழ்க்கை வரலாறு அடுத்த பதிவில் பார்ப்போம்.


Effect Download


Post a Comment

0 Comments