இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வாழ்க்கை வரலாறு தமிழ்

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் சேர மன்னர்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய சேரன் செங்குட்டுவனின் தந்தையான, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

பண்டைய காலத்தில் புலவர் பெருமக்கள் மற்றும் முதிர் வயதுடைய சான்றோர்கள் அனைவரும் மன்னர்களைக் கண்டால் பொதியமும், இமயமும் போல நிலை பெறுக என வாழ்த்துவது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வந்தது. இதை அறிந்திருந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அந்த வாக்கியத்தின் பொருளை ஆராய்ந்தான். தென் பொதியை வேளீர்கள் சேர நாட்டுக்கு உட்பட்டவர்கள். ஆதலால், தென் பொதியையும் சேர நாட்டுக்கு உட்பட்டது என்று உணர்ந்து கொண்ட நெடுஞ்சேரலாதன், பொதிகை போலவே, வட இமயமும், சேர நாட்டோடு, இணைய வேண்டும் என்று தன் மனதில் உறுதி கொண்டு, இமயமே தன் புகழுக்கு எல்லையாக இருக்க வேண்டும் என்று வேட்கையும், கொண்டான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். பாண்டிய அரசு சேர மற்றும் சோழ அரசைவிட மிகவும் தொன்மையானது. அக்காலக் கட்டத்தில் பாண்டிய நாடு ஐந்து பெரும் நாடுகளாகப் பிரிந்து இருந்தது. பின்பு அந்த ஐந்து பெரும் நாடுகளின் தலைவர்கள் இணைந்ததால் பஞ்சவர், பாண்டியர் என்று அழைக்கப்பட்டனர்.


இதைப் போலவே, நெடுஞ்சேரலாதன் முடி சூட்டிக்  கொண்டபொழுது, ஏழு வேந்தர்களின் முடியின் பொன்னால் செய்த பொன்னாரம் ஒன்று சேரர்களின் வழி வழியாக வருப் முறைப்படி நெடுஞ்சேரலாதனுக்கு அணிவித்தனர். அந்த ஏழு பொன்னால் செய்த பொன்னாரத்தின், கருத்தைச் சொல்ல வந்த சான்றோர்கள், தம்மவர்கள் அல்லாத பிற வேந்தர்களை வென்றார், அவர் முடியின் பொன் கொண்டு கழல் செய்து கொள்வது, தமிழ் அரசர்களின் மரபு என்றும். ஒரு காலக் கட்டத்தில் சேர நாடு எட்டு சிறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. அந்த மன்னர்கள் அனைவரும் தனித்து இருந்தால் நம்மைப் பகைவர்கள் எளிதில் வென்று விடுவார்கள் என்று எண்ணி, அந்த எட்டு மன்னர்களும் ஒன்று சேர்ந்து, தம்மில் ஒருவர் முடி சூடும் வேந்தராகவும், மீதமுள்ள ஏழு மன்னர்களும் அவருக்கு, துணையாய் இருக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அந்த ஒற்றுமையைக் குறிக்கவே, அந்த ஏழு வேந்தர்கள், பொன்னாரம் செய்து அணியாகப் பூண்டனார் என்றும், சான்றோர்கள் எடுத்துரைத்தனர்.


இந்த நிகழ்வை மையமாகக் கொண்டே எட்டு பேர் கொண்ட அரசியல் குழு, எண் பேராயம் என்று சேர நாட்டின் வழக்கத்தில் ஒன்று இருந்தது. எண் பேராயம் என்று குறிக்கப்படும் சேர நாட்டின் எட்டுப் பகுதிகள் பின்வருமாறு, குட்ட நாடு, குறை நாடு, குகட நாடு, கொங்கான நாடு, வான நாடு, வாயல் நாடு, கடுங்கோன் நாடு, பூலி நாடு என்பன. இவற்றையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்த நெடுஞ்சேரலாதன் இமயத்தை தன் சேர நாட்டின் எல்லையாகக் கொண்டே தீர வேண்டும் என்று எண்ணி, எண் பேராயம் என்று அழைக்கப்படும் அந்த எட்டு நாடுகளையும் ஒன்று கூட்டி, தன் எண்ணத்தைத் தெரிவித்தான். எல்லோரும் அவனுடைய எண்ணத்தை ஊக்குவிக்க. மேலும், சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் தன்னுடைய எண்ணத்தைத் தூது மூலம் தெரிவித்தான். அந்நாளில் மூவேந்தர்கள் தமிழர்கள் என்ற என்ற இன ஒற்றுமையால், இமயத்தை தமிழகத்தின் எல்லையாகக் கொண்டு, இமயத்தைக் கைப்பற்ற நினைக்கும் நெடுஞ்சேரலாதனின் எண்ணத்தை ஆதரித்து, அவனுக்குத் தங்கள் நாட்டின் இரு பெரும் படைகளையும் உறுதுணையாகப் போருக்கு அனுப்பி வைத்தனர்.


இமயத்தை நோக்கி யானை, குதிரை, தேர், வில், வேல், வாள் ஏந்தும் அனைத்துப் படைகளும் தமிழ்நாட்டிலிருந்து அணி அணியாய் இமயத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன. அப்போது சேர நாட்டின் எல்லையான கொங்காண நாட்டிற்கும், வட இமயமலைக்கும் இடையில் யவனர்கள் என்று குறிப்பிடும் ஆரிய நாடு ஒன்று இருந்தது. அந்நாட்டில் வாழ்ந்து வந்த சதகண்ணரும், மோரியரும் ஆகிய ஆரிய மன்னர்கள் தமிழ்ப் படைகளின் வலிமைப்  அறியாமல் போரிட்டனர். வலிமை இழந்த ஆரிய மன்னர்கள், படை வீரர்கள் பலர், அப்போரில் அழிந்தனர். தமிழ் படையின் வலிமையை எதிர்த்துப் போரிட முடியாத ஆரிய மன்னர்கள் சிலர், நெடுஞ்சேரலாதனுக்கு திரை செலுத்திப் பணிந்தனர். அதன் பின்பு, இமயத்தில் தன் வில் கொடியைப் பதித்து விட்டுத் தமிழகம் திரும்பினான் நெடுஞ்சேரலாதன். அன்று வரை நெடுஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டவன் இமயத்தில் வில் கொடியைப் பதித்ததன் மூலம், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு நெடும் புகழுடன் சிறப்பு பெற்றான். ஆரியத் தலைவர்கள் கொடுத்த பொன்னையும், பொருளையும் தன்னோடு வந்த, தானையத் தலைவர்களுக்கும், மறவர்களுக்கும் கொடுத்து மகிழ்வித்ததோடு, சோழப், பாண்டிய படைகளுக்கும் உரிய சிறப்புகளைச் செய்து அவர்களை இன்பப் படுத்தினான்.


அந்தக் காலக் கட்டத்தில் வேந்தர்களின் முதன்மை பணி என்பது தன் மக்களின் இன்பம், துன்பம் தொழில் உயர்வு, உழவுக்குத் தக்க வேளாண் நிலங்களைக் குடி மக்களுக்கு உருவாக்கித் தருதல் போன்ற விடயங்களும், நாடும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்வது தான் ஒரு வேந்தனின் முதல் மற்றும் முக்கியக் கடமை என்றே பல மன்னர்கள் வாழ்ந்தார்கள். அவ்வாறு இமயம் சென்று வந்த நெடுஞ்சேரலாதன் நாட்டு மக்களின் நிறை, குறையக் கண்டறிய, நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டியவன் ஆனான். அவ்வேளையில் புங்கான நாட்டின் எல்லையில் பல தீவுகள் இருந்தது. அத்தீவுகளில் கடம்பர்கள் என்பவர்கள் வாழ்ந்து வந்தனர். அத்தீவுகளில் சற்று பெரிய தீவு கூவகத் தீவு. அந்தத் தீவையே கடம்பர்கள் முக்கிய தலைநகராகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்று நாம் குறிப்பிடும் கோவா என்ற தீவு தான். அக்காலக் கட்டத்தில் கூவகத் தீவு என்று அழைக்கப்பட்டது.


கடலில் கலம் செலுத்துவதும், மீன் பிடிப்பதும் தான் கடம்பர்களின் முக்கிய தொழிலாக இருந்தது. கடம்பர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டு அந்தக் கடற்கரையிலேயே வாழ்ந்தனர். ஆதலால், கடம்பர்கள் என்ற பெயர் பெற்றார்கள் என்று சங்க இலக்கியங்களிலும், கடம்பர்களின் இடைக் காலச் செப்பேடுகளும் கூறுகின்றன. இந்தக் கடம்பர்கள் இத்தீவுகளில் கொண்டு, கடல் வழியே வந்து செல்லும் வணிக கப்பல்களைச் சூறையாடுவதையும், கடற்கரையில் உள்ள நாட்டில் புகுந்து கொள்ளையடிப்பதையே வழக்கமாகச் செய்து வந்துள்ளனர். அவர்களின் தொல்லையைத் தாங்க முடியாத அந்த நாட்டு மக்கள், நெடுஞ்சேரலாதனிடம் முறையிட்டார்கள். இதனைக் கேட்ட நெடுஞ்சேரலாதன், தன்னுடைய கப்பல் படையைக் கொண்டு, அவர்கள் வாழ்ந்த தீவுக்கேச் சென்று அவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். நெடுஞ்சேரலாதனிடம் அடி பணிந்த கடம்பர்கள், தென்பகுதியை விட்டு விட்டு, வட பகுதிக்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். கடம்பர்களை எவனார்கள் கடல் குறும்பர்கள் என்றும் கூறுவர்.


இக்கடம்பர்களை வெற்றி கொண்ட இமயவரம்பன்  யானை ஒன்றின் மீது ஏறிப் பவனி வர, அக்காட்சியை கண்ட கண்ணனார் என்ற ஒரு சான்றோர், தன் நினைவில் முன்பு ஒரு காலத்தில், முருகன் கடலின் நடுவே மாமரத்தை காவலாகக் கொண்டு, சூரர்களை வென்று விழா எடுத்த நிகழ்ச்சி ஒன்று தோன்ற, அதனால் இமயவரம்மனை அழகிய பாட்டு ஒன்றால் சிறப்பித்தார் கண்ணனார். அப்பாடலைக் கேட்ட நெடுஞ்சேரலாதன் கண்ணனாரின் புலமை வியத்தை கண்டு, தன் அரசவைப் புலவராக நியமித்துச் சிறப்பித்தான். இது போன்ற செயல்களால் நெடுஞ்சேரலாதனின் புகழ் நாடெங்கும் பரவியது. இதனால் நெடுஞ்சேரலாதான் மீது பொறாமை கொண்ட கொங்கான நாட்டின் ஆரிய வேந்தர் மற்றும் சேரனால் விரட்டப் பட்ட கடம்பர்களுள் சிலர் இணைந்து கொண்டு மற்றும் யவனர்களின் கலங்களில் வாணிபம் செய்தமையால், எவனர்கள் சிலரோடு நட்பு கொண்டு இமயவரம்பன் மீது போர் தொடுக்குமாறு அவர்களை ஏமாற்றி, இவர்களும் யவனவர்களுடன் இணைந்து கொண்டு சேரனுக்கு எதிராகப் போரிட்டனர். 


கடலின் நடுவே நடந்த இப்போரில் யவனர்களின் படைகளைச் சேரர்களின் கப்பற்படை சிதறடித்தது. இப்போரில் வென்ற நெடுஞ்சேரலாதன் இப்போருக்கு காரணமானவர்களின் கைகளைப் பிடித்து, முதுகின் புறத்தைச் சேர்த்து கட்டி, தலையில் நெய் பூசி, தன் நாட்டவர் அனைவரும் காணும் படி, வீதியிலே கொண்டு வந்து மிகக் கொடுமையான தண்டனைகளை அவர்களுக்கு அளித்தான். போரில் தோற்றுப் போன யவனர்கள் நெடுஞ்சேரலாதனுக்குப் பொன்னும், வைரமும், மணியும் கொடுத்து அவரது நன்மதிப்பைப் பெற்றனர். நெடுஞ்சேரலாதன் இவ்வாறு வெளிப் பகைவர்களை அழிக்க, உள்நாட்டில் வாழ்ந்த குறு நில வேந்தர்களில் சிலர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு திரை செலுத்துவதை கைவிட்டு விட்டு, அவனுடைய கோபத்திற்கு ஆளாகினர். உடனே, நெடுஞ்சேரலாதன் படை ஒன்றைத் திரட்டி அக்குறு நில மன்னர்களின் கோட்டையை அழித்து, அவர்களின் கொட்டத்தை அடக்கினான்.


இச்செயலை கண்டு மனம் வருந்திய கண்ணனார், நெடுஞ்சேரலாதனிடம், அரசே இவர்கள் செய்த குற்றத்திற்கு இவர்கள் நாட்டு மக்களும் சேர்ந்து தண்டனை அனுபவிக்கிறார்களே, அவர்களின் மீது கருணை காட்டக் கூடாதா? என்று கேட்க, நெடுஞ்சேரலாதனோ, சான்றீரே யான் புலப்படும் கயலின் செயலில் ஈடுபட்டிருங்கால், நாட்டில் பகைமை புரிந்த இவ்வேந்தர் செயல், பொருக்களாகக் குற்றமாதன்று, நீவீர் அறியாததென்று அவருக்கு அருள் செய்து புகழ் அளிப்பது, பகைப் பயிரை நீர் பாய்ச்சி வளர்ப்பது போல, என்று மறு மொழி தெரிவித்தான் நெடுஞ்சேரலாதன். இம்மறு மொழியைக் கேட்ட கண்ணனாரோ நெடுஞ்சேரலாதா, நீ அரசனாக இருக்கும் நாட்டில் உன் மக்கள் துன்பப்படுவது, உனக்கல்லவா இழுக்கு. இதனை நீ ஏற்றுக் கொள்ளாமல் உன் மக்களை நீ துன்பப் படுத்தப் போகிறாயா என்றதும்,  நெடுஞ்சேரலாதனின் மனம் அமைதி பெற்றது. அதன் பின் அந்தக் குறு நில மன்னர்களை மன்னித்து, போரில் ஏற்பட்ட சேதங்களுக்குத் தகுந்த பொருளையும் தந்து அனுப்பினான். அவ்வாறே தன் உற்ற நண்பனாகிய  கண்ணனாருக்கும் கும்பர்காடு என்னும் ஊரில் வரும் தென் பகுதி வருவாயில் ஒரு பகுதியை, திரு ஓலையில் எழுதித் தந்து சிறப்பித்தான். அப்போது நெடுஞ்சேரலாதனின் 38வது ஆட்சி ஆண்டு சேர நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


நாம் இதுவரை கண்ட வகையிலேயே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றி, நமக்குக் கிடைத்தவை. இவனது சிறப்புகள்குறித்து செய்திகள் நமக்குக் கட்டியதை தவிர, இவனது இறப்பு குறித்த செய்திகள் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சேர மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான் மிக முக்கியமான ஒரு மன்னர். இமயமலை வரை சென்று தங்கள் நாட்டின் கொடியை நட்டி விட்டு வருவது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அந்தக் காலக் கட்டத்தில் கரிகால சோழன் மட்டுமே இமயமலை வரை சென்று புலிக்கொடியை நட்டி விட்டு வந்தார். அதன் பிறகு நெடுஞ்சேரலாதன் மட்டுமே இச்செயலைச் செய்திருக்கிறார். இந்த உலகமுள்ள வரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.


Effect Download


Post a Comment

0 Comments