வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -என்றார் வள்ளுவர்.
அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, மடியின்மை, அன்புடைமை, அருளுடைமை ஆகிய அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கினார். அதனால் தான் கவியரசர் தாகூர் மகாத்மா என்ற மாமகுடம் சூட்டி மகிழ்ந்தார். காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி தாய் புத்திலிபாய் அம்மையார். தாயிடம் இறை உணர்வையும் அன்பினையும் செலுத்துக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார் காந்தியடிகள்.
இவரது 12 ஆம் வயதில் கஸ்தூரி பாய் என்பவரைக் கரம் பிடித்தார். பின்னர், தனது 19 ஆம் வயதில் இங்கிலாந்து சென்று அங்குத் தனது பாரிஸ்டர் பட்டம் பெற்றார். உயிரினமாகப் பிறந்த எதற்கும் ஒரு விதமான மனவலிமையும் சுயஉணர்வும் உண்டு. வேண்டுமானால் காலம் அதனைத் தள்ளி வைத்திருக்கலாம். அவ்வகையில் காந்தியடிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் நடைபெற்றது. அவர் தென்னாப்பிரிக்காவில் 1893 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டுவரையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி கொள்கைகள் இருந்ததனைக் கண்டு மனம் கொதித்தார். காந்தி ஒரு முறை ரயிலில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டினை பெற்றார். ஆனாலும் ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட முடியாது என்று மறுக்கப்பட்டது. இதனைப் பற்றி மிகவும் சிந்தித்தபடியே இருந்தபோது மற்றொரு பயணத்தில் வண்டியிலேயே இவரை உட்கார அனுமதிக்கவில்லை. ஆனாலும் போராடி இறுதியில் ஓட்டுனருடன் அமர்ந்து பயணம் செய்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நேரில் கண்ட பல கொடுமைகளின் காரணமாக அங்கே ஆங்கிலேயர்களுக்கு எதிராக "சட்டமறுப்பு" இயக்கத்தைத் தொடங்கினார். 1914 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியா திரும்பினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கினார். காந்தியடிகள் ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையனை எதிர்க்கும் அரசியல் புரட்சி மற்றொன்று இந்திய நாட்டு மக்களை எதிர்த்துச் சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலேயே செய்தார். பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் திலகரைப் போன்று தீவிரவாத முறைகளைப் பின்பற்றாமல் மிதவாதம் எனப்படும் அகிம்சை முறையினை பின்பற்றினார். தன்னுடைய இந்தப் போராட்டத்திற்கு அன்றைக்கு கோபால கிருஷ்ண கோகலேவைத் தன்னுடைய குருவாகவும் ஏற்றுக் கொண்டார். காந்தியடிகள் ரெளலட் சட்டம் அடக்கு முறையிலும் ஆங்கிலேயரின் சட்டங்களை வாய்மை வழியிலேயே எதிர்த்தார்.
சுதேசி இயக்கத்தினை ஆதரிக்க வேண்டிக் கதர் ஆடைகளை உடுத்தினார். 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் உப்பின் மீதான வரியினை எதிர்த்து 2500 தொண்டர்களுடன் உப்பு சத்தியாகிரகம் செய்தார். ஆங்கிலேயரை மட்டுமின்றி அதே நேரத்தில் இந்தியர்களை ஆக்கிரமித்திருந்த மத வேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். "ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே! அறத்தின் வழி நின்று எதிர்த்து நில்! ஆங்கிலப்படை வீரர் தாக்கினால் தாங்கிக்கொள்! எதிர்த்துத் தாக்காதே! கைது செய்தால் அகமகிழ்வோடு செல்! மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!" என்றார். தீண்டாமையே வேண்டாம்! பெண்ணடிமையோ பெருங்குற்றம்! சாதி மத வேறுபாடுகள் வேதனை தருவன! பிற வழி மரண வழி! கள்ளுண்டல் நஞ்சுண்டல்! கோழைத்தனம் கூடாது! சோம்பல் அடிமைத்தனம் என்பவை காந்தியடிகளின் சிந்தனைகள். காந்தியடிகளிடம் அகிம்சை, எளிமை, எளியவர்பால் அன்பு, தன்னல மறுப்பு, பகைவரையும் மன்னிக்கும் பரந்த உள்ளம், சுதேசிப் பொருள்மீது பற்று ஆகிய அரிய பண்புகள் காணப்பட்டன. 'கத்தியின்றி ரத்தமின்றி' யுத்தம் ஒன்றைக் கண்டுபிடித்து அந்நியரை விரட்டிய உலக தலைவர் காந்தியடிகள் ஒருவரே. காலந்தவறாமை, புலால் உண்ணாமை, பொய் பேசாமை என்பனவும் அண்ணலின் வாழ்வில் பூத்துக் குலுங்கிய பண்பு மலர்களாகும். வெள்ளையர் ஆட்சியை அகற்றும் போராட்டத்தை அண்ணல் அறவழியில் நடத்தினார். உப்பு காய்ச்சும் அறப்போர், வரிகொடை இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, தனிநபர் அறப்போர்,
உண்ணாநோன்பு என்னும் வகையில் அண்ணலின் அறப்போர் அமைந்தது. இறுதியாக 1942 இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினையும் நடத்தினார். ஆங்கில அரசு இவரது உறுதிகண்டு ஒரு வழியாக இந்தியாவிற்கு விடுதலை தரச் சம்மதித்ததன் காரணமாக 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம்முடைய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நாட்டிற்கு விடுதலை பெற்று தந்த தந்தையான அவரை நம்மில் ஒருவனான 'கோட்சே' என்பவனே 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் சுட்டுக் கொன்றான். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் சுட்டவனுக்கு தீங்கிழைக்க கூடாது என்றார். ஆம், அவர் இந்தியாவின் மகானாய் மறைந்தார். காந்தியடிகள் மறையவில்லை. நம்மோடு இருக்கிறார் நம்மோடு கலந்து விட்டார் என்று எண்ணுதல் வேண்டும். வாழ்க நீ! எம்மான். இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க! அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார். விடுதலை யார்ந்து, செல்வம் குடிமையி லுயர்ந்து, கல்வி ஞானமும் கூடியோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய் முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மை யுற்றாய் - பாரதியார். உலக உத்தமர் காந்தியடிகளை பாரதியார் இவ்வாறு பாராட்டுகிறார். வீரம் உடலின் ஆற்றல் அல்ல உள்ளத்தின் பண்பு - காந்தியடிகள் 'தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற வார்த்தைகளுக்கு ஏற்றாற் போன்று ஒரு மனிதனாகப் பிறந்து "மாமனிதனாக" வாழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். மனிதன் தன் செயல்களின் மூலமாக மகாத்மாவாக மாற முடியும் என்று சாதித்துக் காட்டி மற்றவர்களுக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்த அந்த மகானைப் பற்றிப் பேசி முடியாது. ஆனால் அவர் வழியில் வாழ முடியும். இதுவே நாம் அவருக்குச் செய்யும் கடமையாகும்.
கரிகால சோழன் ஆட்சி காலம்
Beatmark Download
0 Comments